கோவை ஐடி பார்க் பணி டிசம்பரில் முடியும்-அமைச்சர்
கோயம்புத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி அருகே ரூ. 370 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பணிகளை பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் உமாநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பணிகளை இன்னும் வேகமாக முடிக்க உத்தரவிட்ட அமைச்சர், பின்னர் கூறுகையில்,
முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அடுத்து கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் 17 லட்சம் சதுர அடி பரப்பில் 8 அடுக்குகளை கொண்ட தகவல் தொழில்நுட்பா பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதில் இடம்பெறும் நிறுவனங்களுக்கு உற்பத்தி வரி உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நன்மை அதிகரிக்கும் என்பதால் பலரும் தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள்.
அனைத்து பணிகளையும் வரும் டிசம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.