முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறு வாழ்வு கோரி லண்டனில் 1 லட்சம் தமிழர்கள் பேரணி
லண்டன்: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும். மீண்டும் அவர்களது குடியிருப்புகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் லண்டனில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பல மணி நேரம் நடத்திய பேரணியால் லண்டன் நகரமே ஸ்தம்பித்தது.பிரிட்டிஷ் தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணி மத்திய லண்டனில் உள்ள ஹைட்பார்க் கோணர் எனும் இடத்தில் இருந்து தொடங்கி எம்பாக்மென்ட் என்ற இடத்தை சென்றடைந்தது.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய பேரணி மாலை 6 மணிக்குத்தான் முடிவடைந்தது.
- காணாமல் போன மக்கள் மீட்கப்பட வேண்டும்
- முகாம்களில் வாழும் மக்கள் இயல்நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்
- இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடி மறைப்போரும் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடந்தது.
கருப்பு உடைகளுடன் மக்கள் இதில் கலந்து கொண்டனர். இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்து வரும் அவலங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஊர்வலத்தின் முன்பாக தமிழர் கலைக் குழுவினர் வன்னி வதை முகாம்களின் கொடூரத்தை சித்தரிக்கும் காட்சிகளை தத்ரூபமாக நிகழ்த்திச் சென்றதுடன், மூடி மறைக்கப்பட்ட இரும்புத்திரையின் பின்னால் கொல்லப்பட்ட மக்களின் உருவப்படங்களை தாங்கியவாறும் சென்றனர்.
இங்கிலாந்து மூத்த அரசியல்வாதி டோனி பென், எம்.பிக்கள் ஜெரீமி கோபன், சைமன் ஹூஸ், கொலம்பியாவைச் சேர்ந்தவரும்,கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை விரிவுரையாளருமான ஆன்டி ஹிக்கின்பாட்டம், இடதுசாரி சோசலிச கட்சியின் தேசிய அமைப்பாளர் டான் மேயர் உள்ளிட்டோர் பேரணியின் இறுதியில் உரையாற்றினர்.
புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்த பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசை புலிகள் அமைப்பு அறிவித்துள்ள நிலையில், நடந்துள்ள இந்த பிரமாண்ட பேரணி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி பேசுவோரும், குறிப்பாக இங்கிலாந்து மக்களும் இதில் கலந்து கொண்டனர்.