'இது மக்கள் பட்ஜெட்!'-மாண்டேக் சிங்
டெல்லி: அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் மக்கள் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்த விவரத்தை என்னால் சொல்ல முடியாது. காரணம் அவை இப்போதைக்கு ரகசியமானவை என்றார் அலுவாலியா.
பட்ஜெட் குறித்து அலுவாலியா கூறியதாவது:
2009-2010-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். அதற்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தற்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக உள்ளார்.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 9 சதவீதத்தை எட்ட வேண்டும் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.
வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங்களை துரிதப்படுத்துவதை அரசு பிரதானமாக மேற்கொள்ளும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கிலோ ரூ.3 விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் யோசனையும் இந்த பட்ஜெட்டில் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வேளாண் மற்றும் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைய சூழலில் நடப்பு நிதி ஆண்டில் எந்த அளவு வளர்ச்சி இருக்கும் என கணிக்க முடியாது. இருப்பினும் கடந்த நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்ததால் இம்முறை 7 சதவீதத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் இதை ஈடு செய்ய முடியும். செலவுகளை அதிகப்படுத்துவது நல்லது. இருப்பினும் அதற்காக வரம்பு மீறிய செலவினங்களை அனுமதிக்க முடியாது," என்றார் மாண்டேக் சிங் அலுவாலியா.
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே, இந்த பட்ஜெட் பொதுமக்களுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவழிக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.