குண்டுகள் வீசி திமுக ஊராட்சி தலைவர் கொலை

ஆரணியை அடுத்த மருசூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி. இவர் நேற்று சென்னையில் சட்டசபை நிகழ்ச்சியை பார்த்து விட்டு இரவு 9.30 மணிக்கு ஊர் திரும்பினார். இரவு 11.30 மணி வரை ஊர் பஞ்சாயத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் சுந்தரமூர்த்தி படுத்திருந்த அறையில் பயங்கர வெடிச் சத்தம் சத்தம் கேட்டது. பக்கத்து அறையில் குழந்தைகளுடன் படுத்திருந்த அவரது மனைவி திடுக்கிட்டு எழுந்து கணவரின் அறைக்கு ஓடினார். அப்போது அடுத்தடுத்து மேலும் இரு குண்டுகளும் வெடித்தன.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். புகை மண்டலமாகக் காணப்பட்ட அந்த அறையில் சுந்தரமூர்த்தி கருகிப் போய் பலியாகிக் கிடந்தார். அந்த அறையே சிதறி சின்னாபின்னாவாகிவிட்டது.
சம்பவம் குறித்து அறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன், மாவட்ட எஸ்பி பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் ஆகியோரும் தடயங்களை சேகரித்தனர். வீட்டின் ஜன்னல் வழியாக யாராவது நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கலாம், அல்லது ஏற்கனவே டைமருடன் கூடிய குண்டுகளை வீட்டுக்குள் வைத்துவிட்டுப் போயிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications