தீட்சிதர்களை கண்டித்து கோட்டை முன் திடீர் மறியல்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தமிழக அரசு நிர்வாக அதிகாரியை நியமிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.
மேலும் தீட்சிதர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தில்லை நடராஜர் கோயில் பொதுவான கோயில் என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால் இன்று வரை தீட்சிதர்கள் கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை.
இதை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனி சட்டம் இயற்றி நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும், கொலை, நகை திருட்டு, கோயில் நில மோசடி, விற்பனை மற்றும் கிரிமினல் குற்றம் புரிந்த தீட்சிதர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த அமைப்பு கோரியுள்ளது.
மேலும் பல ஆண்டுகள் போராடி பெற்ற அரசாணையுடன் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமிவுடன் கோவிலுக்குள் சென்ற மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞரையும் தீட்சிதர்கள் தாக்கியுள்ளனர்.
நடராஜர் கோயில் தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கோட்டை எதிரே திடீர் மறியல் போராட்டத்தில் இந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 3 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்தனர்.
சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.