தூத்துக்குடி மின் நிலையம்-கூடுதல் மின்சாரம் கேட்கும் தமிழகம்
சென்னை: தூத்துக்குடியில் என்எல்சி நிறுவனம் அமைக்கவுள்ள மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவிலான மின்சாரம் தர வேண்டும் என தமிழகம் கோரியுள்ளது.
இதே நிலைதான் குஜராத்திலும் என்எல்சிக்கு ஏற்பட்டது. அங்குள்ள வாலியா என்ற இடத்தி்ல 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டது என்எல்சி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தது.
ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் குஜராத்துக்கே தர வேண்டும் என அம்மாநில அரசு கூறியதால், இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது என்எல்சி.
தற்போது தமிழகத்திலும், தமிழக அரசுடன் இணைந்து தூத்துக்குடியில் மின் நிலையம் அமைக்கிறது என்எல்சி. இந்த நிலையில்தான் தமிழகத்திற்கு அதிக அளவிலான மின்சாரத்தைத் தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தூத்துக்குடியில், மாநில மின்வாரியத்துடன் இணைந்து ரூ. 3,354 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்எல்சி.
இந்தக் கூட்டுத் திட்டத்தின் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த்க கூட்டுத் திட்டத்தில் தமிழக அரசின் பங்கு 11 சதவீதமாகும்.
இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 75 சதவீதத்தை அதாவது 750 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாம். ஆனால் தமிழகத்திற்கு 55 சதவீதமே அதாவது 550 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தருவதாக என்எல்சி கூறியது. அதிலும் கூட தற்போது 494 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
குஜராத்தைப் போல அதிரடியாக அத்தனையும் எங்களுக்கே என்று தமிழக அரசு கேட்கவில்லை. மாறாக அதிக அளவிலான மின்சாரத்தை மட்டுமே கேட்கிறது என்று மின்வாரிய தரப்பில் கூறுகிறார்கள்.
அதேசமயம், ராஜஸ்தானில் என்எல்சி நிறுவனம் 250 மெகாவாட் மின் திறன் கொண்ட நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த மின்சாரம் முழுவதையும் ராஜஸ்தானுக்கே என்எல்சி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications