மின்னணு எந்திரம்: முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை-சாவ்லா
ஷில்லாங்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாரும் எந்த முறைகேடும் செய்ய முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடந்த அனைத்து மாநில தேர்தல் ஆணையாளர்கள் கூட்டத்தில் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளர் நவின் சாவ்லா கலந்து கொண்டார்.
அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு கட்சிகள் தெரிவித்து வரும் புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நமது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் வாக்குப் பதிவு எந்திரங்களும் முற்றிலும் மாறுபட்டது.
அவர்கள் எந்திரங்கள் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், நமது எந்திரங்களில் ஒரு சிப் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதை வெளியிலிருந்து யாராலும் மாற்ற முடியாது. இதனால் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகளும் சிறிதும் இல்லை.
நம் நாட்டில் இருக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு பொது துறை நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. அவை தனியாரிடம் விடப்படவில்லை.
இது தொடர்பாக எழுந்த பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்கள் விசாரித்துவிட்டன. ஆனால், இவை அனைத்தும் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்றும், அதை முழுமையாக நம்பலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளன.
அதே போல் முன்னாள் சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பிவி இந்திரேசன் தலைமையிலான மூன்று நபர் தொழில்நுட்ப கமிட்டியும் இந்த சந்தேகங்கலை அர்த்தமில்லாதவை என கூறியுள்ளது.
வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக தற்போது எதுவும் சொல்ல முடியாது. நாடு முழுவதும் ஆரோக்யமான விவாதம் நடத்தி முடிவு செய்யலாம் என்றார் நவின் சாவ்லா.