விசா மோசடி- கிரிக்கெட் வீரர், பெண் கைது
சென்னை: கணவன், மனைவி என்று கூறி போலி ஆவணங்களைக் காட்டி அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரர், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகேயுள்ள வதோதராவைச் சேர்ந்தவர் இம்ரான் குலாம் பாய் படேல். 27 வயதான இவர் அம்மாநில ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வரும் வீரர் ஆவார்.
இவர் அமெரிக்கா செல்ல விசா கோரி புதுச்சேரி முகவரியைக் கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இவருடன் சோனல் பென் என்ற பெண் மனைவி என்று கூறி விண்ணப்பித்திருந்தார்.
நேற்று முன்தினம் காலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு விசாரணைக்காக படேலும், சோனலும் வந்தனர்.
நான் சித்த வைத்தியர், அமெரிக்காவை சுற்றிப் பார்க்க மனைவியுடன் செல்வதாக இம்ரான் தெரிவித்தார்.
ஆனால் இம்ரான் மற்றும் சோனலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் தனித் தனியாக விசாரித்தனர். அப்போது சோனல் உண்மையை உளறிக் கொட்டி விட்டார்.
தனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றும், அமெரிக்காவில் வீட்டு வேலை பார்ப்பதற்காக இம்ரானின் மனைவி என்ற பெயரில் விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து இருவரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர் தூதரக அதிகாரிகள். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்களுக்கு போலி ஆவணம் மூலம் விசா விண்ணப்பத்தை சமர்ப்பித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த அல்டாப் இஸ்மாயில் (42) என்ற ஏஜென்ட்டையும் கைது செய்தனர்.
அமெரிக்காவுக்கு இவர்கள் இருவரையும் அனுப்ப ரூ. 2ல லட்சம் கமிஷன் தொகையையும் வாங்கியிருந்தாராம் இஸ்மாயில்.
சோனல் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வறுமையி்ல வாடி வரும் அவர் அமெரிக்கா சென்று வீட்டு வேலை செய்து பிழைப்பதற்காக இம்ரானின் மனைவியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம்.