'வணங்காமண்': சட்டசபையில் பாமக வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து பாமக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை இன்று காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து தாங்கள் கொடுத்திருந்த பல்வேறு தீர்மானங்கள் மீது பேச அனுமதி கேட்டனர்.
ஆனால், இன்று கேள்வி நேரம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், நேரமில்லா நேரத்தையும் (ஜீரோ அவர்) எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி பேச அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
இதையடுத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்தத் மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்து முடித்ததும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுந்து, இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரணப் கப்பலை அந் நாட்டு அரசு விரட்டியடித்தது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேச முயன்றார்.
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாமக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த ஜி.கே.மணி நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் 844 டன் அளவுக்கு உணவுப் பொருள், மருந்துகளை வணங்காமண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இலங்கை அதை திருப்பி அனுப்பி விட்டது. கடந்த 10 நாட்களாக அந்தகப்பல் எங்கே செல்வதென தெரியாமல் சென்னை அருகே நடுக்கடலில் நின்றது. இதில் தமிழக அரசும் மத்திய அரசும் முறையான அக்கறை செலுத்தவில்லை.
அந்த கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை தமிழர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
இலங்கையில் போர் முடிந்து விட்டதாக அந்த நாட்டு அதிபர் கூறி இருக்கிறார். அங்கு எஞ்சியுள்ள தமிழர்களை பசி, பட்டிணியாக சாகடிக்க திட்டமிடுகிறார்களா?.
இது குறித்து சட்டசபையில் விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும், ஒத்தி வைப்பு தீர்மானமும் கொடுத்து ஒரு வாரம் ஆகி விட்டது. இதை இன்னும் விவாதத்துக்கு எடுக்க வில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
இதற்கிடையே சென்னை கடல் எல்லையில் இருந்து விரட்டப்பட்ட அந்தக் கப்பல் இப்போது சர்வதேச கடல் எல்லையில் நின்று கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications