மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
சென்னை: கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10 சதவீதத்துக்கும் சற்று அதிக ஓட்டு வாங்கி, மற்ற கட்சிகளை ஆச்சர்யத்தில் மூழ்க செய்தது. மேலும், சுமார் 25 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை பலப்படுத்தும் அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளார். அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து கலந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், கட்சியின் மாநில மகளிரணி தலைவி ரெஜினா பாப்பா ஆகியோர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர்.
இவர்கள் கட்சியின் 10 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்கள், நகராட்சி. பேரூராட்சி மகளிர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் இன்று மாலையில் இந்த 10 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்க இருக்கின்றனர்.
மேலும், அவர் இது போன்ற ஆலோசனை கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த இருக்கிறார். நாளை ஜூன் 25ம் தேதி கோயம்புத்தூரிலும், 26ம் தேதி மதுரையிலும், 27ம் தேதி தஞ்சாவூரிலும், 28ம் தேதி விழுப்புரத்திலும் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.