கிருஷ்ணா-கோதபய சந்திப்பு: கப்பலுக்கு அனுமதி?

நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆலோசகரான பாசில் ராஜபக்சேவும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராஜபக்சேவின் சகோதரர்களான இந்த இருவரும் மூத்த ஆலோசகர் லலித் வீராதுங்கேவும் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.
அப்போது வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கையில் அனுமதித்து அதை போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கிருஷ்ணா முன் வைத்தார்.
இதற்கு இலங்கை குழு சம்மதம் தெரிவித்ததாக பின்னர் கிருஷ்ணா நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் பற்றி இரு தரப்பும் பேசியதாகத் தெரிகிறது.
இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்ததால் அது இந்திய கடல் எல்லைக்கு வந்து சென்னை துறைமுகம் அருகே நங்கூரமிட்டது.
ஆனால், அதை சோதனையிட்ட இந்திய கடற்படை அது சந்தேகத்திற்கிடமான கப்பல் என்று கூறி விரட்டியதால் அது சர்வதேச கடல் எல்லையில் நின்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை நடத்த கடந்த ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும் என இச் சந்திப்பின் போது இலங்கையிடம் வலியுறுத்தியதாகவும் கிருஷ்ணா கூறினார்.












Click it and Unblock the Notifications