ஸ்ரீரங்கம் ஜீயரை 9ம் தேதி ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை: மாயமான ஸ்ரீரங்கம் ஜீயரை ஜூலை 9ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பலகரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் தலைமை ஜீயரான லட்சுமண ராமானுஜ ஜீயரை (83) கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் காணவில்லை.
அவரை கண்டுபிடிக்கக்கோரி ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன சங்க தலைவர் கோவிந்தராமானுஜ தாசா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜீயர் மடத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பத்ரிநாராயணன் ஜீயரை மிரட்டி மடத்தின் சொத்துக்களை தனது பெயருக்கு உயிலாக எழுதி வாங்கி உள்ளார். மேலும் ஜீயரையும் அவர் மறைத்து வைத்துள்ளார் என்று கூறப்பட்டிந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜீயரை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு திருச்சி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி சார்பில் அரசு வழக்கறிஞர் டேனியல் மனோகர் ஆஜரானார்.
அவர் வாதாடுகையில், முதலில் திருப்பதியில் ஜீயர் இருந்த இடத்தை கண்டுபிடித்து போலீசார் சென்றனர். ஆனால், அங்கிருந்த ஜீயர் ஒரிஸ்ஸா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பூரிக்குச் சென்றபோது, ஜீயர் கோவிலுக்குள் இருக்கிறார். திருவிழா முடிந்த பின்பு தான் அவர் வெளியே வருவார் என்று கோவில் நிர்வாகிகள் கூறிவிட்டனர்.
அடுத்த மாதம் 7ம் தேதி பூரி கோவில் திருவிழா முடிவடைகிறது. அதன் பின் ஜீயரை ஆஜர்படுத்துகிறோம். அதுவரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு நீதிபதிகள், திருவிழாவுக்காக கால அவகாசம் அளிக்க முடியாது என்றனர்.
இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர், கடைசி வாய்ப்பு கொடுங்கள். கண்டிப்பாக ஆஜர்படுத்துகிறோம்' என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மனுதாரரான கோவிந்தராமானுஜதாசா, இங்கு வந்துள்ள மடத்தின் சமையல்காரர் பத்ரிநாராயணனை விசாரித்தால் எல்லாம் தெரிந்து விடும் என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்று கூறி விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் ஜீயரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மடத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் பக்தர்களுக்காக திறந்து விடப்படவில்லை என்றும், பக்தர்கள் உள்ளே நுழைவதை பத்ரிநாராயணனின் மனைவி கோதாராணி தடுத்து வருவதாகவும் கோவிந்தராமானுஜதாசா புகார் கூறினார்.
இதற்கு கோதாராணி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications