இலங்கை-இப்போதைக்கு ஐ.எம்.எப் கடனுதவி இல்லை!
ஐ.நா.: இலங்கை கோரியுள்ள கடனுதவி குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அமைச்சர் மார்க் மலூச் பிரவுன் இதுகுறித்து ஐ.நாவில் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளரிடம் கூறுகையில், இலங்கை கோரியுள்ள 1.9 பில்லியன் டாலர் கடன் தொகை குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதுவரை அதுகுறித்து விவாதமே நடைபெறவில்லை. எனக்குத் தெரிந்து அதுதொடர்பாக எந்த அசைவும் இல்லை என்றார்.
இதன் மூலம் இலங்கை கோரியுள்ள கடன் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே, கொழும்பில் இரண்டு ஐ.நா. பணியாளர்கள் கடத்தப்பட்டது குறித்து இதுவரை ஐ.நா. கருத்தே தெரிவிக்காமல் உள்ளது.
இதுகுறித்து பிரவுன் கூறுகையில், பல்வேறு நாடுகளும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. நாங்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளோம் என்றார்.
இந்த கடத்தல் குறித்து பான் கி மூனின் செயலாளர் மான்டோஸ் கூறுகையில், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
பர்மியர்களைக் காப்பாற்றினேன் .. பான் கி மூன் தம்பட்டம்
இந்த நிலையில் அமெரிக்காவின் சார்லி ரோஸ் டிவி ஷோவில் பங்கேற்றுப் பேசிய பான் கி மூன், இலங்கை இனப்படுகொலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் மியான்மர் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், மியான்மரில் 5 லட்சம் மக்களை நான் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து காப்பாற்றினேன் என்றார்.
இதுகுறித்து ஐ.நா.வுடன் தொடர்புடைய ஒரு தமிழர் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில், 5 லட்சம் பர்மியர்களை காப்பாற்றினேன் என்று கூறும் பான் கி மூன் மறைமுகமாக 20 ஆயிரம் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றத் தவறி விட்டதை ஒப்புக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம் என்றார்.
எந்த அடிப்படையில் 5 லட்சம் பர்மியர்களை காப்பாற்றினேன் என்று பான் கி மூன் கூறுகிறார் என்று அவரது செயலாளர் மான்டோஸிடம் கேட்டதற்கு, மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு அந்த உதவிகள் கிடைக்கச் செய்ததை மனதில் கொண்டே அவ்வாறு பான் கி மூன் கூறியுள்ளார் என்றார்.
அப்படியானால் இலங்கையில் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்யப்படவில்லை என்பதையும் பான் கி மூன் மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக இன்னர் சிட்டி பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.