நூற்பாலை கழிவு-பச்சையாக மாறிய காவிரி!
சேலம்: சேலம் மாவட்ட பகுதிகளில் இருக்கும் நூற்பாலைகளின் கழிவுகள் காவிரி ஆற்றோடு கலப்பதால் நீர் பச்சை நிறமாக மாறி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து சுமார் 11 கிமீ., தூரத்தில் உள்ள பூலாம்பட்டி என்ற கிராமம் வழியாக காவிரி ஆறு ஓடுகிறது. இந்த பகுதியில் இருந்து தான் ராசிபுரம், இடைப்பாடி, வீரபாண்டி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் பேருக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையில் 10க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலந்து விடுகின்றன. மேலும் அருகில் உள்ள கிராம சாக்கடை நீரும், ஆற்று நீரோடு கலக்கிறது. இதனால் காவிரி ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
இந்த நீரில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக சுகாதாரததுறை உடனடியாக விழித்து கொண்டு செயல்பட்டு பொது மக்களின் நலனை காக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடு்க்கின்றனர்.