நாட்டுக்கு ஜெ-வீட்டிற்கு கருணாநிதி- இது ராமராஜன்
அரியலூர்: நாட்டுக்காக பாடுபடக் கூடியவர் ஜெயலலிதா. ஆனால் தன் வீட்டுக்காக மட்டுமே பாடுபடக் கூடியவர் முதல்வர் கருணாநிதி என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
அரியலூர் அருகே வி.கைக்காட்டியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.யும் தலைமை கழகப் பேச்சாளருமான நடிகர் ராமராஜன் கலந்து பேசினார். அவர் கூறுகையில்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. தேர்தலில் தில்லு முல்லு போன்ற முறைகேடுகள் செய்து தான் திமுக வெற்றி பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தல் வரட்டும் கருணாநிதியின் ஆராஜக ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் தில்லு முல்லு முறைகேடுகள் செய்து வெற்றி பெறலாம் என நினைத்தால் அது முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான். இது உறுதி.
அதிமுக அட்சியில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில், விலைவாசி உயர்வு, மின் வெட்டு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழப்பறி நடைபெற்று வருகின்றது.
மின்சாரத்தை கண்டு பிடித்தது யார் என்று கேட்டால் மக்களுக்கு தெரியாது, ஆனால் மின் வெட்டை கண்டு பிடித்தது யார் என்றால் ஆற்காடு வீராசாமி என்று உடனே சொல்லி விடுவார்கள் .
நாட்டு மக்களுக்காக பாடுபடக் கூடியவர் ஜெயலலிதா. ஆனால் தனது வீட்டு மக்களுக்காக பாடுபட கூடியவர் கருணாநிதி என்றார்.