ஸ்பிக் திறக்காவிட்டால் போராட்டம்-நல்லகண்ணு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்பிக் நகரில், மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலர் மோகன்ராஜ் தலைமையி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
ஸ்பிக் உர ஆலை கடந்த இரு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அதனால், அதன் சார்பு ஆலைகளான டாக், கனநீர் ஆலை போன்றவையும் இயங்காமல் உள்ளன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி வாடுகின்றனர்.
ஸ்பிக் ஆலை இயங்காதது தூத்துக்குடியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் உரத்தேவையை பாதித்துள்ளது. அதை திறக்க பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.
மத்திய ரசாயான உரத்துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ஒருவரே பொறுப்பேற்றுள்ளார். அவர், ஸ்பிக் ஆலையை விரைவில் திறப்பதாக கூறியுள்ளார். ஆனால், அதற்கான அறிகுறி இதுவரை தெரியவில்லை.
ஸ்பிக் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications