திண்டுக்கல் அருகே திமுக பெண் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெண் ஊராட்சித் தலைவர் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மஞ்சுளா முருகன் (30). திமுகவைச் சேர்ந்தவர்.
இவர் புதுக்காமன்பட்டியில் பிரதமர் நிதியில் இருந்து கழிவுநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த சிலர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மஞ்சுளா முருகனோடு வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென்று புதுக்காமன் பட்டியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் மஞ்சுளா முருகனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மஞ்சுளா முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்கு பதிவு செய்தார். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் உறிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், இச் சம்பவம் குறித்து, துணை முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு, ஊராட்சிமன்ற பெண் தலைவர்களின் கூட்டமைப்பு ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முருகன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications