10 புதிய மாநிலங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
டெல்லி: பத்து புதிய மாநிலங்கள் அமைக்க இதுவரை மத்திய அரசுக்குக் கோரிக்கைக வந்துள்ளதாம்.
பீகாரைப் பிரித்த மித்திலாஞ்சல், குஜராத்தைப் பிரித்து செளராஷ்டிரா, கர்நாடகத்தைப் பிரித்து கூர்க் ஆகிய மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பது அதில் இடம் பெற்றுள்ள புதிய கோரிக்கைகள்.
அதேபோல ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை மேற்கு வங்கத்திலிருந்துப் பிரித்து கூர்க்காலாண்ட் அமைக்க வேண்டும் என கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஆகியவையும் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.
அதேபோல, உ.பி. மற்றம் மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள பான்டா, சித்ரகூட், ஜான்சி, லலித்பூர், சாகர் ஆகிய மாவட்டங்களை இணைத்து தனியாக பந்தல்கண்ட் மாநிலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
அதேபோல கிழக்கு உ.பி, பீகார், சட்டீஸ்கர் பகுதிகளை போஜ்பூரை தலைநகரமாக வைத்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வந்துள்ளது.
குஜராத்தின் செளராஷ்டிரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை உள்ளது.
மேற்கு உ.பியில் உள்ள பல்வேறு மாவட்டங்களை இணைத்து ஹரித் பிரதேசம் அல்லது கிஷான் பிரதேசம் என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளதாம்.
பீகாரில் உள்ள சில பகுதிகளை இணைத்து மிதிலா அல்லது மிதிலாஞ்சல் என்ற பெயரில் ஒரு மாநிலம் உருவாக்க வேண்டும். அதேபோல மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் சில பகுதிகளைப் பிரித்து கூச் பிகார் மாநிலம் உருவாக்க வேண்டும். மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள கூர்க்கை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வந்து குவி்ந்துள்ளன.
புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் தேவை. ஆனால் மேற்கண்ட 10 மாநில கோரிக்கைக்கும் முறைப்படியான ஒப்புதலோ, அங்கீகாரமோ, பரி்ந்துரையோ இல்லை.
புதிய மாநிலக் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளதாம். எதையும் இதுவரை பரிசீலிக்கக் கூட இல்லையாம்.