நீச்சில் பயிற்சியில் மாணவன் பலி-4 பேர் கைது
நெல்லை: நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவர் பலியானார். இதையடுத்து நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 30 பேரை பாளையங்கோட்டை அரசு நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்.
அப்போது மாணவர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் முகம்மது ஆஷிக் (8) என்பவரும் கலந்து கொண்டார். ஆஷிக்கின் தந்தை சாகுல் அமீது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர பொருளாளராக உள்ளார்.
இந்நிலையில் பயிற்சி ஆசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக மாணவர் ஆஷிக் நீரில் முழ்கி பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த ஆஷிக்கின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தமுமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவர் பலியான சம்பவத்திற்கு காரணமான பள்ளி தாளாளர், நீச்சல் பயிற்சியாளர்கள் மீது உடனே நடவடிக்கை வலியுறுத்தி நெல்லை டவுனில் திடீர் சாலை மறியல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
இது குறித்து உதவி கமிஷ்னர் ராமசந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் நீச்சல் பயிற்சியாளர்கள் வள்ளிநாயகம், முத்துரமேஷ், வசந்தகுமார் மற்றும் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் பெரியதுரை ஆகியோரின் கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து பாளையங்கோட்டை இனஸ்பெக்சடர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இரு ஆசிரியர்கள் மீது ஆர்டிஓ விசாரணை இன்று நடக்க இருப்பதாக தெரிகிறது.
பள்ளிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை...
இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க நெல்லை மாவட்ட போலீசார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நெல்லை மாநகரத்திலுள்ள தனியார் பள்ளிகள் நீச்சல் பயிற்சிக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தகுந்த பாதுகாப்பு அளித்து பயிற்சி அளிக்க வேண்டும். தன்னிச்சையாக மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி எடுக்க வேண்டும் என்று கட்டாய படுத்தக்கூடாது.
அவ்வாறு கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் இருந்து புகார் வந்தால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.