போலி பாஸ்போர்ட் மூலம் குழந்தையை அழைத்து வந்த தந்தை கைது
சென்னை: 2 வயதுக் குழந்தையை போலி பாஸ்போர்ட் மூலம் லண்டனிலிருந்து அழைத்து வந்ததற்காக முதலில் குழந்தையைப் பறிமுதல் செய்தனர் போலீஸார். பின்னர் குழந்தை அழவே குழந்தையின் தந்தையை கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு பரமேஸ்வரன் என்ற மகனும், கன்யா (2) என்ற மகளும் உள்ளனர்.
ராஜா லண்டனில் வேலை பார்த்து வருகிறார். ராஜா குடும்பத்தினர் லண்டனிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்தனர். அப்போது ராஜா உள்ளிட்டோரின் பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவற்றை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருந்தன. ஆனால் குழந்தை கன்யா பெயரிலான பாஸ்போர்ட் போலி என்று தெரிய வந்தது.
இதையடுத்து ராஜா, குழந்தையை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் குழந்தையை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டனர். போலீஸாரைப் பார்த்து குழந்தை மிரண்டு போய் அழுதது. இதையடுத்து குழந்தையை சிவசங்கரியிடம் கொடுத்து விட்டு ராஜாவைக் கைது செய்தனர் போலீஸார்.