தமிழக மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த மீன்களை அபகரித்துக் கொண்டும், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை கடலில் தூக்கி வீசியும் இலங்கை கடற்படையினர் மீண்டும் அடாவடி செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களை கடற்படையினர் தாக்குவது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கேட்க நாதியிலலாத நிலையில் தமிழக மீனவர்கள் சிங்கள காடையர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ராமேசுவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே அவர்களில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், மீனவர்கள் தங்களது படகை கரைக்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் இலங்கை கடற்படையினர் 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகுகளில் இறங்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கொள்ளையடித்தனர். மேலும் அவற்றில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசினர். மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். சில மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.
இனி இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மீன்வளத்துறையிடம் புகார் தரப்பட்டுள்ளது.