பொன்னமராவதியில் பாம்பு கடித்து தாய்-மகள் பலி
பொன்னமராவதி: பொன்னரமாவதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் பாம்பு கடிக்கு பலியானார்கள். இதை பார்த்த பாட்டி ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே செம்பூதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜகுமாரி என்ற பெண் தனது மகள் பசுரூதீன் என்ற பாரதி (35) மற்றும் பேத்தி கீர்த்தனா (12) உள்ளிட்டோருடன் வசித்து வந்தார்.
இவர்களது வீடு இருக்கும் பகுதியில் தோட்டங்களும், செடி கொடிகளும், இடிந்து போன மண்குடிசைகள் இருந்துள்ளது. அதே நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி பாம்பு நடமாட்டமும் இருந்து வந்துள்ளது. கிராமப் பகுதிகளில் இதெல்லாம் சகஜம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று ராஜகுமாரி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நன்கு தூங்கி கொண்டிருந்தனர்.
அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் கீர்த்தனாவின் காலில் எதுவே கடித்துள்ளது. அந்த சிறுமி என்னவென்று எழுந்து பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு முறை கடித்துள்ளது. இதில் அந்த சிறுமி அந்த இடத்திலே நுரை பொங்க மயங்கி சரிந்தார்.
தன் மகள் வாயில் நுரை தள்ளி மயக்கி கிடப்பதை அறியாமல் அருகில் படுத்திருந்த பாரதி தன்னை எதோ கடிப்பதை உணர்ந்து கூச்சலிட்டார். இதையடுத்து சற்று தள்ளி படுத்திருந்த பாட்டி ராஜகுமாரி விளக்குகளை போட்டார். அப்போது அங்கு ஒரு சாரை பாம்பு படம் எடுத்து ஆடி கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் அந்த பாம்பு தான் கடிந்தது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் பாரதியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தார். தன் மகள் மற்றும் பேத்தி இருவரும் நுரை தள்ளி கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் பாட்டி ராஜகுமார் அலறியபடி மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். சாரை பாம்பை அடித்து கொன்ற அவர்கள் மயங்கி கிடந்த மூவரையும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுனர். அங்கு அவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.