தியாகிகள் சிலைகளைத் தவிர மற்றவற்றை தூக்கி விடலாம்!
டெல்லி: ஆயிரக்கணக்கான கோடி பணத்தை செலவழித்து மாயாவதி செய்துள்ள சிலை அலங்கார அலங்கோலத்தைப் பார்க்கும்போது, பேசாமல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மட்டுமே சிலை வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
உ.பியில் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தைக் கொட்டி கன்ஷிராம் மற்றும் தனக்கு சிலைகளை அமைத்து வருகிறார் மாயாவது.
இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் நூற்றுக்கணக்கில் மாநிலம் முழுவதும் நிறுவியுள்ளார்.
இதை எதிர்த்தும், உடனடியாக இவற்றை அகற்றக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து அவசரம் அவசரமாக சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக இவற்றை திறந்து வைத்து விட்டார் மாயாவதி.
மாயாவதியின் இந்த போக்கை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக கண்டித்திருந்தார். ரூ. 1000 கோடியைக் கொட்டி மாயாவதி செய்துள்ள இந்த செயலை விட இந்தியாவில் அவமானகரமான சம்பவம் ஏதேனும் உண்டா என்று சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கண்டித்திருந்தார்.
இறைத்த பணம் ரூ. 2000 கோடி இருக்கும்...
ஆனால் ப.சிதம்பரம் கூறியதை போல ரூ. 1000 கோடியுடன் இது நின்று விடவில்லை. ரூ. 2000 கோடி வரை பணத்தை வாரி இறைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த நினைவிடங்கள், மைதானங்கள், சத்திரங்கள், சிலைகள் உள்ளிட்டவற்றை பராமரிக்க மட்டும் ஆண்டுக்கு ரூ. 270 கோடி செலவாகுமாம். இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் பல ஆயிரக்கணக்கில் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
தீன் மூர்த்தி பவன் மட்டும் நியாயமா?-பகுஜன்
ஆனால் இதெல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய வழக்கு என்று கூறுகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் மிஸ்ரா.
இதுகுறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பகுஜன் சமாஜ் சார்பில் அவரும் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், மேல்ஜாதித் தலைவர்கள் பெயரில் நினைவிடங்கள், சிலைகள், நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படும்போதெல்லாம் யாரும் இதுபோல குரல் எழுப்புவதில்லை, கவலைப்படுவதில்லை, கோபப்படுவதில்லை.
மாயாவதி அரசு செய்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து யாரும் பேசுவதே இல்லை. அதேசமயம், அவரது அரசு அமைக்கும் நினைவிடங்கள் குறித்து மட்டும் கோபமாக பேசுகிறார்கள்.
இது ஒரு அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய வழக்காகும். மனுதாரரின் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை அல்ல.
தலித் தலைவர் யாருக்காவது நினைவிடம் அமைத்தால் மட்டும் கூக்குரல் எழுப்புவது ஏன்?. டெல்லியில் பல ஏக்கர் கணக்கில் தீன் மூர்த்தி பவன் அமைந்துள்ளது. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவில்லம் குறித்து யாரும் பேசுவது கிடையாது.
இந்த நினைவிடத்தின் இன்றைய மதிப்பு ரூ. 3000 கோடி. இதையும் கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்து யாரும் கேள்வி கேட்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.
ஆனால், அம்பேத்கர் போன்ற ஒரு தலைவருக்காக நினைவிடம் அமைத்தால் ஆட்சேபனை எழுப்பப்படுகிறது என்றார்.
ஆனால், மாயாவதி அரசின் இந்த ஆடம்பர செலவுகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள வக்கீல் ரவிகாந்த் கூறியுள்ள தகவல்கள் பகீரென உள்ளது.
ரவிகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில்..
ரூ. 1200 கோடியை செலவிட்டு நினைவிடங்கள், சிலைகளை அமைத்துள்ளது உ.பி. அரசு. உ.பி. மக்கள் தொகையில் பெருமளவிலானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள்.
இந்தியாவிலேயே குறைந்த அளவிலான கல்வி அறிவு பெற்றவர்கள் கொண்ட மாநிலமாக உ.பி. உள்ளது. இங்கு கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 56.27 சதவீதமாகும்.
மிகப் பெரிய அளவிலான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள மாநிலமும் உ.பி.தான். பிறக்கும்போதே குழந்தைகள் இறக்கும் சம்பவங்களும் இங்கு அதிகம்.
59 சதவீத கிராமங்களில்தான் மின்சார வசதியே உள்ளது. மற்ற கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கிக் கிடக்கின்றன.
ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு மான்யாவார் கான்ஷி ராம் நினைவிடம், கான்ஷி ராம் பகுஜன் நாயக் பூங்கா, கான்ஷிராம் கலையரங்கம், மான்யவார் கான்ஷிராம் யாத்கார் விஷாரம் ஸ்தலம், புத்த ஸ்தலம், ஈகோ பார்க், சமதா முலாக் சுரஹா, புத்த சாந்தி உப்வான், பிரேர்னா ஸ்தலம் என அமைத்துள்ளார் மாயாவதி.
இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையின் சிலைகளையும் நூற்றுக்கணக்கில் நிறுவியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஜாதி சாயம் பூச முயற்சி...
தலித் தலைவர்களுக்கு மட்டும் அமைத்தால் கோபிக்கிறார்களே என்று வாதத்தை எடுத்து வைத்து இந்த விவகாரத்திற்கு இப்போது ஜாதி சாயம் பூச முயன்று வருகிறது பகுஜன் சமாஜ் கட்சி.
உயர் ஜாதித் தலைவர்களுக்கு மட்டும் நினைவிடங்கள் அமைக்கலாமா என்று கேட்கிறது பகுஜன் சமாஜ். அப்படியானால் அதுபோன்ற மேல் ஜாதித் தலைவர்களின் நினைவிடங்கள், சிலைகளை எதிர்த்து மாயாவதி ஏன் முன்பே கேள்வி எழுப்பவில்லை, வழக்கு தொடரவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தியாகிகளுக்கு மட்டும் சிலை வைக்கலாம்...
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியான தீர்ப்பைத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை மட்டுமே நிறுவலாம். மற்ற அனைத்து சிலைகளையும் தூக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தால்தான் இதுபோன்ற மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.












Click it and Unblock the Notifications