சீர்திருத்த இல்லம்: 4 சிறார்கள் ஓட்டம்- திருடியபோது மூவர் சிக்கினர்
நெல்லை: தூத்துக்குடியில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பி ஓடிய 4 பேரில், 3 பேர் நெல்லையில் திருடியபோது மீண்டும் போலீஸார் வசம் சிக்கினர்.
தூத்துக்குடி அருகேயுள்ள தட்டம்பாறையில் சிறுவர் சீர்திருத்த இல்லம் உள்ளது. இங்கு சிறு வயதில் குற்றம் செய்த சிறுவர்களும், வீட்டுக்கு அடங்காமல் இருப்பவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சீர் திருத்தி அந்த பகுதியில் உள்ள பள்ளி கூடங்களில் அரசு கூர்நோக்கு அலுவலர்கள் படிக்க வைத்து வருகிறார்கள்.
இங்கு தென்காசியை சேர்ந்த யூசுப் என்ற அன்சாரி (15), வேப்பலோடையை சேர்ந்த முருகன் (12), கோவில்பட்டியை சேர்ந்த வீரமணிகண்டன் (17), சுரண்டை கருவந்தாயை சேர்ந்த ஆறுமுக நயினார் ஆகிய 4 சிறுவர்களும் தங்கி இருந்து அருகில் உள்ள பள்ளி கூடத்தில் 7ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று பள்ளி கூடம் முடிந்து தட்டம்பாறை இல்லத்திற்கு வரவேண்டிய மேற்கண்ட 4 பேரும் அங்கு போகாமல் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தப்பி சென்றனர். அங்கிருந்து ரயிலில் வித்தவுட்டில் பயணம் செய்து நெல்லைக்கு வந்தனர்.
அதன்பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் ஓரு பாட்டியுடன் பேசியபடி அவருக்கு உதவி செய்தவாறு வந்தனர். அந்த பாட்டி தனது பொருட்கள் அனைத்தையும் ஆட்டோவில் ஏற்றி நெல்லை டவுனுக்கு சென்றார்.
அவருடன் தப்பியோடிய 4 சிறுவர்களும், நாங்களும் டவுனுக்கு வருகிறோம் என்று கூறி ஏறிக் கொண்டனர். டவுனில் எங்கு செல்வது என்று தெரியாமல் 4 சிறுவர்களும் தெரு தெருவாக சுற்றி உள்ளனர்.
பின்னர் நள்ளிரவில் முகமது அலி தெருவில் நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி படுத்து கொண்டனர். இன்று அதிகாலை எழுந்த 4 சிறுவர்களும் செலவுக்கு பணம் இல்லாததால் அந்த பகுதியில் நின்ற ஒரு சைக்கிளை திருடி விற்று செலவு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி அன்சாரி ஒரு வீ்ட்டின் முன்பு நின்ற சைக்கிளை மெதுவாக திருடி வெளியே எடுத்து வந்தான். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அதை பார்த்து திருடன்..திருடன் என கத்தவே அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்றனர். இதை பார்த்த யூசுப் என்ற அன்சாரி சைக்கிளில் வேகமாக தப்பி சென்றான். மற்ற 3 பேரும் மாட்டிக் கொண்டனர்.
அவர்கள் மூன்று பேரும் போலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டனர். போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தியபோது தான் இவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை தண்டாம்பாறை சிறுவர் இல்லத்துக்கே அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். தப்பியோடிய அன்சாரியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications