இலங்கை அரசின் போக்கு வருத்தம் தருகிறது-ப.சி.
உடனடியாக நிவாரணப் பணிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு ஈடுபடுத்த வேண்டும். அகதிகள் முகாம்களைப் பார்வையிட மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், இலங்கைத் தமிழர் மறு வாழ்வுக்காக இந்தியா ரூ. 500 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இலங்கை அரசு இதுவரை மறு சீரமைப்பு மற்றும் மறு வாழ்வுத் திட்டத்தை தயாரிக்காமல் உள்ளது.
இது எங்களை வருத்தப்பட வைத்துள்ளது. இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என வற்புறுத்தப்பட மாட்டார்கள். அவர்களாக விரும்பினால், அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இலங்கைத் தமிழர்களைக் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. நாங்கள் இலங்கை அரசிடமும், விடுதலைப் புலிகளுடனும் பேசினோம். இரு தரப்புமே நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை.
அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழர் பகுதிகளில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைத் தரப்பில் எங்களுக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் சீனாவின் உதவியுடன் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக கூறப்படுவது உறுதிப்படுத்தப்படாத செய்தி. அப்படி எதுவும் இல்லை.
இலங்கைக் கடற்படையினரால் நடுக் கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடலோரக் காவல் படையினர் கூடுதலாக 10 ரோந்துப் படகுகளை கேட்டுள்ளனர். ஒவ்வோரு படகும் சில கோடி மதிப்பிலானவை. இருப்பினும் படிப்படியாக அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்.
உணவுக்கும் கல்விக்கும் உத்தரவாதம்:
அரசு வேலைகளில் தற்போது பெண்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு இல்லை. எனவே இதுதொடர்பான சட்ட மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
மக்களுக்கு உணவுக்கும் கல்விக்கும் உத்தரவாதம் அளிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார் ப.சிதம்பரம்.