3 மகன்களை இழந்த தாய்-முதல்வர் ரூ. 75,000 உதவி
தூத்துக்குடி: கல்குவாரி குட்டையில் குளிக்க சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் பலியான சம்பவத்தில் அவர்களது தாயாருக்கு ரூ. 75 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு்ள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் வசிப்பவர் வெங்கடாசலம். தினக் கூலியாக வேலை செய்து வருகிறார்.
அவருடைய மனைவி சாந்தி தனது உடன் பிறந்த தம்பியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தனது மூன்று மகன்களுடன் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்திற்கு சென்றார்.
அப்போது, பொன்மார் என்ற கிராமத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காகச் சென்ற அவரது மகன்கள் ராஜவேல் (22), மேகநாதன் (15), கோபி என்ற கோவிந்தராஜன் (10) ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாமாக இறந்து விட்டனர்.
கடந்த 24.6.2009 அன்று தூத்துக்குடி சென்றிருந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், சாந்தி தமது மூன்று மகன்கள் இறந்த துயர சம்பவம் குறித்து அவரிடம் நேரடியாக முறையிட்டு நிவாரண உதவி வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார்.
இந்த விண்ணப்பத்தை பெற்றுகொண்ட அழகிரி அதை முதல்வரின் பார்வைக்கு அனுப்பினார்.
இது குறித்த விவரம் தமது கவனத்திற்கு வந்தவுடன் ஒரே நேரத்தில் மூன்று மகன்களைப் பறிகொடுத்த வெங்கடாசலம், சாந்தி தம்பதியரின் மன நிலைமையை எண்ணிப் பெரிதும் வருந்திய முதல்வர் உயிரிழந்த மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 75 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.