உதவித் தொகை-அரசு டாக்டர்கள் போராட்டம்
சென்னை: பிற டாக்டர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பட்ட மேற்படிப்பு பயிலும் டாக்டர்களுக்கும் கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்படிப்பு மேற்கொள்ளும் டாக்டர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
தற்போது 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், டாக்டர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கவுள்ளது.
இந்த நிலையில், பட்ட மேற்படிப்பு பயிலும் டாக்டர்களும் தங்களுக்கான கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் மேற் படிப்பு மேற்கொள்ளும் தனியார் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல அனைத்து மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மேற்படிப்பு டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எந்தவிதப் பயிற்சியிலும் ஈடுபடாமல் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளனர்.