திருமண பதிவை கட்டாயமாக்க தமிழக அரசு சட்டம்!
சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இதை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் திருமணத்தை பதிவு செய்வதால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகள், பதிவு செய்யாதவருக்கு மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களின் திருமணம் நடக்கிறது. இந்த திருமணங்கள் எங்கு நடத்தி வைக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தில் அந்த இடத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கோர்ட்டு கருதுகிறது.
எனவே மாநிலத்தில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்களாக இருக்கும் நபர்கள், அனைவரது திருமணமும் கட்டாயமாக பதிவு செய்ய வழி செய்யும் பொருட்டு புதிய சட்டம் தேவை என கருதப்படுகிறது.
இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புதிய மசோதாவின்படி திருமணம் செய்யும் நாளில் இருந்து ஒருவர் 90 நாட்களுக்குள், தன் திருமணத்தை அந்த பகுதி பதிவாளரிடம் நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலம் சான்றிதழை அனுப்ப வேண்டும்.
90 நாட்களைக் கடந்தால் கூடுதல் கட்டணம் செலுத்தி குறிப்பு, ஆவணங்களை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் வகை முறைகள் எதையும் விதிகளை மீறுகிற நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.
திருமண ஆவணத்தை வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.
திருமண பதிவேட்டை அதன் பகுதி எதையும் மறைத்து வைத்து, நேர்மையற்ற முறையில் மோசடியாக மாற்றம் செய்யும் நபர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.