தமிழக மீனவர்களை சூறையாடிய இலங்கை
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டி சூறையாடி அட்டகாசம் செய்துள்ளனர் இலங்கை கடற்படையினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட படகுகளை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
கச்சத்தீவு அருகே, மார்சிலின் என்பவருக்குச் சொந்தமான படகில் மீனவர்கள் அந்தோணியார் அடிமை (வயது 40), மனோகர் (30), டேனியல் (18), விஜய் (18), லுவிசன் (18) உள்பட 5 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கையில் இருந்து அதிவேக ரோந்து படகில் கடற்படையினர் வந்தனர். ராமேஸ்வரம் மீனவர்களின் படகில் ஏறி, 5 மீனவர்களையும் தாக்கினர். பிறகு அந்த படகை இயக்கி, மற்ற படகுகள் மீது மோதச் செய்தனர்.
இதில் படகின் வலது பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. சுமார் 1 மணி நேரம் இவ்வாறு அச்சுறுத்தி தமிழக மீனவர்களின் படகை சேதப்படுத்தியதுடன் விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். இதுகுறித்து சேசு என்ற மீனவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இனியும் இது போன்று நடந்தால் கடலுக்குள் இலங்கை கடற்படை படகை தமிழக மீனவர்கள் ஒன்று திரண்டு முற்றுகையிடுவோம். இது விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மீனவர்களும் குமுறிக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்கத்தான் நமது நாட்டுக்குள்ளேயே யாரும் இல்லாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications