கருணாநிதி-எதியூரப்பா சந்திப்பு: பெங்களூர் வள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது

மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை வந்தார் எதியூரப்பா. பின்னர் அவர் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
மருத்துவப் பரிசோதனைக்காக எதியூரப்பா சென்னை வருவதை அறிந்த முதல்வர் கருணாநிதி, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததைத் தொடர்நது அதை ஏற்று எதியூரப்பா கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் எதியூரப்பா வெளியில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தேன். இதில் பங்கேற்க முதல்வர் ஒப்புதல் தெரிவித்தார். விழா நடப்பதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தமிழக சட்டசபைக் கூட்டம் முடிந்த பின் தேதி முடிவு செய்யப்படும்.
அதேபோல, சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவி சர்வஞ்னர் சிலையை அமைக்க தமிழக அரசு இடம் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்த இடத்தை கர்நாடக உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
காவிரி குறித்து பேசவில்லை..
கருணாநிதியுடன் காவிரி நதி நீர் பிரச்சினை பற்றி விவாதிக்கவில்லை. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து இரு மாநில அரசுகளும் சேர்ந்து விவாதித்து முடிவு எட்டப்படும் என்றார் எதியூரப்பா.
மனமார்ந்த பாராட்டுக்கள்-இல.கணேசன்:
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில்,
இன்று காலை தமிழக முதல்வரை சந்தித்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேசி தீர்வு கண்டுள்ளார். பெங்களூரு நகரில் பல்லாண்டு காலமாக திறக்கப்படாமல் உள்ள திருவள்ளூவர் சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பது என்றும், அதே நாளில் சென்னையில் கர்நாடகப் புலவர் சர்வஞ்னரின் சிலையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா திறந்து வைப்பது என்றும் முடிவெடுத்தார்கள்.
இதற்காக இடம் ஒதுக்கிய தமிழக அரசுக்கு கர்நாடக முதல்வர் நன்றி தெரிவித்தார். இதன் காரணமாக பல்லாண்டு காலமாக தமிழக மக்கள் ஏக்கத்துடன் எதிர் பார்த்திருந்த ஒரு பிரச்சினை சுமுகமாக முடிவடைகிறது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு மாநில முதல்வர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications