For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏமன் விமான விபத்து-தப்பிய சிறுமி தந்தையுடன் இணைந்தார்

By Staff
Google Oneindia Tamil News

மொரானி: ஏமன் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுமி தனது தந்தையுடன் இன்று இணைந்தார்.

ஏமானியா நிறுவனத்தைச் சேர்ந்த ஏர்பஸ் ஏ 310 விமானம் செவ்வாய்க்கிழமையன்று காமரூஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த 152 பேரும் பலியாகி விட்டனர். ஆனால் 12 வயதேயான பாஹியா பகாரி என்ற சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் பாஹியாவுடன் பயணித்த அவரது தாயார் உயிரிழந்து விட்டார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரமாக கடலில் தத்தளித்த அந்த சிறுமி மிகுந்த மன தைரியத்துடன் நீந்தியபடி கரையை நோக்கி வந்தபோது மீட்புக் குழுவினரால் பார்க்கப்பட்டு மீட்கப்பட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியின் உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து இன்று பிரான்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார் பாஹியா. அங்கு அவரது தந்தையுடன் இணைந்தார்.

பாரீஸில் உள்ள ராய்சி விமான நிலையத்தில் தனது மகளை கண்ணீர் மல்க வரவேற்ற தந்தை பகாரி காசிம், ஒரே சமயத்தில் நிம்மதியும், சோகமும் என்னை சூழ்ந்து கொண்டுள்ளது. எனது மகளை மீண்டும் பார்க்க முடிந்ததில் மகிழ்கிறேன். ஆனால் அவரது தாயார் மீண்டும் திரும்பி வர மாட்டார் என்பதால் சோகமடைகிறேன் என்றார்.

பாஹியாவுக்கு தனது தாயார் விபத்தில் இறந்தது குறித்து இன்னும் தெரியாது. அவர் இன்னும் முழுமையாக தேறவில்லை என்றும் லேசாகத்தான் பேசுகிறார் என்றும் அவருடன் வந்த டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானத்துக்குள்ளேயே பலரின் உடல்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், கடல் மேல் எந்த உடலும் தற்போது மிதக்கவில்லை. எனவே விமானத்தின் சிதைந்த பாகத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதேசமயம், விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதையும் தேடும் முயற்சிகள் தொடருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X