வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை-பதட்டம் அதிகரிப்பு
சியோல்: வட கொரியா இன்று இரண்டு குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. இதனால் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.
வட கொரியா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி பரிசோதித்து வருகிறது. சமீபத்தில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ராக்கெட்டையும் அது ஏவிப் பரிசோதித்தது.
வட கொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இருப்பினும் அதை வட கொரியா நிராகரித்து விட்டது.
இதையடுத்து வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மேலும் இறுக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியவை.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலுக்குள் இந்த ஏவுகணைகளை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் சில நாட்களில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய திறன் படைத்த நடுத்தர ரக ஏவுகணைகளை வட கொரியா ஏவவுள்ளதாக தென் கொரிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல இந்த மாதத்திலேயே 1000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ரோடாங் ஏவுகணை, 340 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ஸ்கட் ஏவுகணைகளையும் வட கொரியா அடுத்தடுத்து ஏவிப் பார்க்கவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications