டீசல் விலை உயர்வால் லாரி கட்டணம் உயர்வு
சென்னை: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகள் கட்டணம் 12 சதவீதம் வரை உயரும் என்று தெரிகிறது. வரும் திங்கட்கிழமை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
இதனால் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், சமையல் கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டீசல் விலை உயர்வை சமாளிக்க கட்டணத்தை அதிகரித்தே ஆக வேண்டிய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 அதிகரித்ததன் மூலம் லாரிகளுக்கு கூடுதலாக 8 சதவீதம் வரை செலவு ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் 10 முதல் 12 சதவீதம் வரை வாடகை கட்டணத்தை உயர்த்தினால் தான் தொழில் நடத்த முடியும் என்ற நிலை லாரி உரிமையாளர்களுக்கு.
இந்தியாவில் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தில் 78 சதவீதம் லாரிகள் மூலம்தான் நடைபெறுகிறது என்ற நிலையில் இந்த கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயரவுள்ளது.