தனியாரிடம் பயணிகள் ரயில் சேவை-சர்வே பரிந்துரை
டெல்லி: பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில்,
நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களில் இருந்தும் தனியார் ரயில்களை இயங்க அனுமதி வழங்கலாம். சுமார் 10க்கும் மேற்பட்ட வழிதடங்களில் இந்த ரயிலை இயக்கலாம். தனியாருக்கு தலா ஒரு ரயில் விதம் ஒதுக்கலாம்.
கடந்தாண்டு இந்திய ரயில்வேக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட பயணிகள் போக்குவரத்து அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2007-08ல் 5 சதவீதமாக உயர்ந்த பயணிகள் போக்குவரத்து 2008-09ல் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 697.1 கோடி பயணிகளை சுமந்து சென்றுள்ளது.
அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது. 2007-08ல் 9 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி, 2008-09ல் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாக ரயில்வே துறையினர் சென்னை-டெல்லி, மும்பை-கொல்கத்தா, காரக்பூர்-விஜயவாடா, சென்னை-கோவா உள்ளிட்ட வழித்தடங்களை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
பயணிகளின் குறைகளை போக்கும் விதமாக ரயில்வே சுமார் 325 ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும். 24 முதல் 26 பெட்டிகள் கொண்ட நீளமான பயணிகள் ரயில்களை இயங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 502 ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
விபத்துக்கள் குறைந்துவிட்டன...
ரயில் விபத்துக்களும் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. பத்து லட்சம் கிமீ., பயணத்தில் எத்தனை விபத்துக்கள் நடக்கிறது என்பதை வைத்து ரயில் பாதுகாப்பு எண் கணக்கிடப்படுகிறது. கடந்த 2001-02 ல் 0.55 இருந்த இந்த ரயில் பாதுகாப்பு எண் தற்போது 0.20 ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் 2007-08ல் 194 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. அது இந்தாண்டு 177 ஆக குறைந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 5320 டிக்கெட் மையங்களில் சுமார் 2079ல் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளும் கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படுகிறது. 375 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் மையங்கள் செயல்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.