மமதாவின் பட்ஜெட் அருமை-மன்மோகன்
டெல்லி: மமதா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் மிகச் சிறப்பானது. ரயில் பயணிகள் சந்தோஷமாக பயணம் மேற்கொள்ளக் கூடிய வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
ரயில்வே பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், மிகவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டை, மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார் மமதா.
பயணிகள் கட்டணம் உயர்த்ப்படவில்லை. சரக்குக் கட்டணமும் உயர்த்ப்படவில்லை. இது பாராட்டுக்குரியது.
அரசின் தேர்தல் வாக்குறுதிகளை மனதில் கொண்டு மமதா பட்ஜெட்டைத் தயாரித்துள்ளார். பயணிகளின் நலன், பாதுகாப்பு, இனிமையான ரயில் பயணம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டால் ரயில் பயணிகளின் பயணம் இனிய அனுபவமாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார் பிரதமர்.
இது தேர்தல் பட்ஜெட் - சிபிஎம்
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு மமதா தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இது என்று சிபிஎம் குறை கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா கூறுகையில், மேற்கு வங்கத்தில் 2011ல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்ட பட்ஜெட் இது.
இருப்பினும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது, பல்வேறு சலுகைகள் ஆகியவற்றை பாராட்டுகிறோம் என்றார்.
இதேபோல சிபிஐ தேசிய செயலாளர் ராஜா கூறுகையில், சலுகைகள், கட்டண உயர்வின்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறோம்.
ஆனால், தேர்தலை மனதில் கொண்டு மேற்கு வங்கத்திற்கு நிறைய புதிய ரயில்களை மமதா அறிவித்துள்ளார். மேலும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல புதிய ரயில்கள் ஏற்கனவே லாலு பிரசாத் அறிவித்தவைதான் என்றார்