சிலை வைப்பதைத் தட்டிக் கேட்ட தலைவர் டிஸ்மிஸ் - மாயா அதிரடி
உ.பியில் சமீபத்தில் பல ஆயிரம் கோடி செலவில் மாயாவதிக்கு சிலை, கான்ஷிராமுக்கு சிலை, அம்பேத்கருக்கு நினைவு மண்டபங்கள், கட்சிச் சின்னமான யானைக்கு நூற்றுக்கணக்கில் சிலை என சிலை அலங்கார களேபரத்தை நடத்தி முடித்தார் மாயாவதி.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. கோர்ட்டும் மாயாவதியின் செயலைக் கண்டித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சிலை விவகாரத்தை தட்டிக் கேட்ட தனது கட்சிக்காரரை தூக்கி விட்டார் மாயாவதி.
உத்தரகாண்ட் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான முன்னா சிங் செளஹான்தான் நீக்கப்ட்ட தலைவர் ஆவார்.
சரமாரியாக சிலைகள் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர் கேட்டதுதான் செளஹான் செய்த தவறு.
செளஹான் 3 மாதங்களுக்கு முன்புதான் கட்சியிலேயே சேர்ந்தார். இப்போது சிலை விவகாரத்தி்ல அவரது தலையை உருட்டி விட்டார் மாயாவதி.
இதுகுறித்து கட்சியின் தலைவர் மேக்ராஜ் சிங் கூறுகையில், சிலைகள் வைப்பதிலிருந்து மாயாவதி தள்ளி நிற்க வேண்டும். அதற்குப் பதிலாக தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று செளஹான் கட்சித் தலைவர் மாயாவதிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். கடந்த ஒரு மாதமாகவே கட்சி கூட்டம் எதற்கும் செளகான் வருவதில்லை. இதையடுத்து கட்சியை விட்டு செளஹான் நீக்கப்பட்டுள்ளார் என்றார்.