இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி - இதுவரை 120 பேர் பாதிப்பு
டெல்லி/கொச்சி: இந்தியாவில் முதன் முறையாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 120 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
இறந்தவரின் பெயர் ஸ்டான்லி பெலிஸ். கேரளாவைச் சேர்ந்தவர். 52 வயதான இவர் 2 வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து கொச்சிக்கு வந்தார்.
அங்கிருந்து தனது சொந்த ஊரான கொல்லம் சென்றார். அங்கு வந்தவுடன் அவருக்கு உடல் நலம் பாதிக்க
ப்பட்டது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஹோலி கிராஸ் மருத்துவமனை டாக்டர் ஷைலஜா கூறுகையில், கடும் காய்ச்சல் மற்றும் மூச்சிறைப்பு காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு பெலிஸ் உயிரிழந்தார் என்றார்.
பன்றிக் காய்ச்சலால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை உறுதிப்படுத்த அவரது உமிழ் நீர் பரிசோதநைக்காக டெல்லியில் உள்ள தேசிய தொற்று நோய்க் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குப் பின்னர்தான் மரணத்திற்கான காரணம் தெரிய வரும். ஒரு வேளை பன்றிக் காய்ச்சலால்தான் இவர் இறந்தார் என்பது உறுதியானால், பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் பலியான முதல் நபர் இவர்தான்.
இதற்கிடையே, கர்கான், பெங்களூர், புனே, கொச்சி ஆகிய ஊர்களில் மேலும் நான்கு பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.