விஷ மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 5000 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
தற்போது மாம்பழ சீசன். சென்னை நகரில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
விதம் விதமான மாம்பழங்கள் குவித்து வைத்து விற்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாம்பழங்கள் ஆந்திராவிலிருந்து அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.
தேவை அதிகமாக இருப்பதால், பழுக்காத மாம்பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து விடுகின்றனர். இவற்றை அவர்கள் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனைக்கு விடுகின்றனர்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த வகை மாம்பழங்கள் பெருமளவில் விற்பனையாவது குறித்து புகார்கள் சென்றன.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். சில நாட்களுக்கு முன்பு 250 மாம்பழங்களை பறிமுதல் செய்து அளித்தனர். கார்பைடு கல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பூச்சிகளைக் கொல்ல பயன்படுத்தும் எத்ரால் என்ற நச்சுக் கொல்லி மருந்தையும் இப்போது தெளித்து மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்களாம்.
இதையடுத்து சென்னை முழுவதும் அதிரடி சோதனையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மேயர் மா.சுப்ரமணியனும் கோயம்பேடு மார்க்கெட்டில் நேரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது ரசாயன மருந்து தெளித்த குடோன்கள் இரண்டை மூட உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதால் வயிற்றுப்போக்கு, வாய்ப்புண் போன்ற உடல் நலக்குறைவுகள் ஏற்படுகின்றன.
இப்போது எத்ரால் என்ற ரசாயன மருந்தை தெளிக்கிறார்கள். இந்த மருந்து தெளிக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால் மந்த புத்தி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனவே மாநகராட்சி சுகாதாரத்துறை சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் நான்கைந்து கடைகளை நானே பார்வையிட்டேன். கார்பைடு கல் மற்றும் எத்ரால் ரசாயன மருந்து அதிக அளவில் உபயோகித்த 2 பெரிய குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு பேராபத்தை விளைவிக்கும் இந்த மாதிரி செயல்களில் வியாபாரிகள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து இதில் ஈடுபட்டால் நிரந்தரமாக கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.