For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைத்தாள்-'அலட்சிய' ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை அலட்சியமாகவும், கவனக்குறைவுடன் செய்த ஆசிரியர்கள் யார் என்பது அறியப்பட்டு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என பள்ளிகல்வி துறை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசு பொது தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் அலட்சிய போக்கு காரணமாக பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு பின் 1,184 மதிப்பெண்கள் பெற்ற போதும், கிருஷ்ணகிரி மாணவருக்கு மாநில அளவில் முதல் ரேங்க் கிடைக்கவில்லை.

இவரைவிட ஒரு மார்க் குறைவாக எடுத்த நான்கு பேருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் 10ம் வகுப்பு தேர்வில் 21 மதிப்பெண்கள் எடுத்து, தோல்வியடைந்ததாக கூறப்பட்ட ஒருவருக்கு மறுகூட்டலுக்கு பின் 50 மார்க் கூடுதலாக அளிக்கப்ப்டடு 71 மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது.

இது போல் மேலும் பல தவறுகள் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. இதில் வணிகவியல் மாணவர் ஒருவருக்கு 109 மதிப்பெண்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. முதலில் அந்த மாணவர் வணிகவியல் பாடத்தில் 60 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தான் எப்படியும் 150 மதிப்பெண்கள் மேல் பெறுவேன் என நினைத்தேன். ஆனால், வெறும் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளேன் என பெற்றோரிடம் கூறி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலின் போது அந்த மாணவர் 160 மதிப்பெண்கள் எடுத்திருப்பதும், அது தவறுதலாக 60 என போடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் விடைகளை திருத்திய போது அந்த மாணவருக்கு மேலும் கூடுதலாக 9 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இறுதியில் அவர் 169 மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவருக்கு 109 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

ஒரு விடைத்தாளை ஒரு ஆசிரியர் திருத்தி மதிப்பெண்கள் போட்டாலும், அதை இரண்டு பேர் பரிசோதிக்கிறார்கள். அதாவது ஒரு விடைத்தாள் சுமார் மூன்று பேரை தாண்டி வருகிறது. இப்படி இருந்தும் இது போன்ற மிகப்பெரிய தவறுகள் மிகவும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

மேலும் இந்த ஆண்டு மறுகூட்டல் செய்தவர்களில் 1,287 பேருக்கு மதிப்பெண்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர்கள் 1,287 தவறுகள் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக வேதியியல் தேர்வில் 408, இயற்பியலில் 310, கணிதம் 282, உயிரியியலில் 199, வணிகவியலில் 37 பேருக்கும் மதிப்பெண்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலில் ஒவ்வொரு பாடவாரியாக அதிகபட்சமாக அளிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களின் விபரம்: வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 109, பொருளாதாரத்தில் 53, கணிதம் மற்றும் வேதியியல் தலா 40, இயற்பியல் 30 மதிப்பெண்களும் சிலருக்கு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மதிப்பெண்கள் குறைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு 28 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
தேர்வு தாள் திருத்தும் பணியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குளறுபடியை அடுத்து அதற்கு காரணமாக இருக்கும் ஆசிரியர்கள் கண்டுபிடித்து நீக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி கூறுகையில்,

விடைத்தாள் திருத்தத்தில் எந்த அளவுக்கு குறைபாடுகள் இருக்கிறது என்பது கண்டறியப்படும். இது தொடர்பான அனைத்து புள்ளிவிவரங்களும் அரசு தேர்வுத்துறையிடம் இருந்து பெறப்படும்.

இதன் பின்னர் விசாரணை மேற்கொண்டு தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படலாம். அடுத்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும். அதற்கு தேவையான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X