நீதிபதிக்கு மிரட்டல் விவகாரம் - ராஜாவிடம் விளக்கம் கேட்டுள்ளார் கருணாநிதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண் திருத்தல் மோசடி விவகாரத்தில் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தன்னை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டும் வகையில் கூறியதாக நீதிபதி ரகுபதி பரபரப்புத் தகவலைத் தெரிவித்தார்.
இதையடுத்து யார் அந்த அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் யார் என்பதைக் கண்டுபிடித்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பின.
இந்த நிலையில் ராஜாதான் அந்த அமைச்சர் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக தெரிவித்தார். அவரை உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜா மறுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால் அதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், யார் அவர் என்பதை நீதிபதிதான் சொல்ல வேண்டும். அவரே சொல்லாதபோது யார் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் ராஜாவிடம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் அரங்கில் பேச்சு அடிபடுகிறது.
யார் இந்த கிருஷ்ணமூர்த்தி..?
கிருஷ்ணமூர்த்தி குறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிடுகையில், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூரைச் சேர்ந்தவர். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அவரது தொழிலில் அமைச்சர் ராஜாவுக்கு 15 சதவீத பங்கு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications