புதிய அணை: கேரள திட்டம் பலிக்காது-துரைமுருகன்
உத்தமபாளையம்: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் பலிக்காது என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் பலிக்காது. பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மத்திய நீர்வள கமிஷன் மற்றும் நிபுணர்களின் அறிக்கையையும், கோர்ட் தீர்ப்பையும், கேரள அரசு ஏற்க மறுத்துள்ளது. அது மட்டுமின்றி அணையின் பாதுகாப்பு குறித்த அறிக்கையினையும் ஏற்க மறுத்துள்ளது.
தற்போது மீண்டும் அதே தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் கேரள அரசு புதிய அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.
ஒரு சிறு வாய்க்கால் கட்டுவதற்கே ஆயிரம் விஷயங்களை கடந்து செய்ய வேண்டி உள்ளது. அப்படி இருக்கும் போது புதிதாக அணை கட்டுவது என்பது முற்றிலும் நடக்காத விஷயம். இது குறித்து பொது மக்கள் பயப்பட தேவையில்லை.
மக்களுக்காகவே சட்டம். ஆட்சியும் அவர்களுக்காகவே. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் சட்டம் மற்றும் நீதித் துறையை அணுக வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது வருத்தம் அளிக்கிறது. நீதித்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வழக்குகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications