சூரியன் மறையலாம், ஒருபோதும் மரணிக்காது - சீமான்
பெரம்பலூர்: சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது. மீண்டும் மீண்டும் உதிக்கும். அதுபோல விடுதலை புலி இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.
பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிட கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூரில் கண்டனக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்று சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாம் ஆறரை கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம். சீக்கியன் அடிபட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிபட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான்.
இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டாலருக்கு ராஜபக்சே விலை போய்விட்டார். கச்சத் தீவில் ராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.
இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மவுனம் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது.
அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன். நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம்.
தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.
விடுதலைபுலி இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது.
உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் ரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம்.
தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது மீண்டும் மீண்டும் உதிக்கும் அதுபோல விடுதலை புலி இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications