அச்சுதானந்தன், விஜயன் மீது நடவடிக்கை இல்லை - சிபிஎம்
டெல்லி: கேரள் முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் கேரள மாநில சிபிஎம் செயலாளர் பினரயி விஜயன் ஆகியோர் மீது பொலிட் பீரோ கூட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் பொலிட்பீரோ கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் துவங்கியது. இந்த கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் நிலவும் பிரச்சனை, லாவலீன் ஊழல் குறித்தும் முதல் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு துருவங்களான அச்சுதானந்தன் மற்றும் பினரயி விஜயன் ஆகியோர் தொடர்ந்து கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வருவதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்திருந்த பேட்டியில், இப் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். இதனால் கேரளாவில் கட்சியின் நிலைமை பரிதாபமாகிவிட்டது என்று கூறியிருந்தார். இதனால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது குறித்த முடிவை கட்சி பொலிட்பீரோ தள்ளிப் போட்டு விட்டது. இதனால் இருவரது தலையும் தற்போதைக்குத் தப்பியுள்ளது.