கமிட்டி அமைக்க அரசு முடிவு - அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க கமிட்டி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து டாக்டர்கள் இன்று மேற்கொள்ளவிருந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள், முது நிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரியும், மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் தர வேண்டும் என்று கோரியும், பயிற்சி டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தும் இன்று ஸ்டிரைக் நடத்தப் போவதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்தது.
இதனால் அரசு மருத்துவமனைகளி்ல் நிலைமை மோசமடையும், நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளவார்கள் என அஞ்சப்பட்டது.
இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதாரத் துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க நிதித்துறை முதன்மைச் செயலாளர் பிரவீன் குமார் தலைமையில் கமிட்டி அமைப்பது எனவும், இந்தக் கமிட்டி ஒரு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதை அடுத்த ஒரு மாதத்தில் பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இத்தகவலை தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதால், போராட்டத்தை டாக்டர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை ஏற்று அரசு டாக்டர்கள் இன்றையை ஸ்டிரைக் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications