திருமணம் இதயங்களை இணைக்க வேண்டும்-கருணாநிதி
சென்னை: எந்த மார்க்கத்தின் திருமணமாக இருந்தாலும் அறிவுக்கு ஒத்ததாக, இதயங்களை இணைப்பதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
பிரசிடெண்ட் ஹோட்டல் அதிபர் அபுபக்கர் மகள் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில்,
இங்கே நடைபெற்ற இந்த மணவிழா மிக சுருக்கமான நேரத்திலே விரைந்து நடைபெற்று, நமக்கெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.
திருமணம் என்கிற போது எந்த மார்க்கத்தின் திருமணமாக இருந்தாலும் அது அறிவுக்கு ஒத்ததாக- இதயங்களை இணைப்பதாக இல்வாழ்வு எதிர் காலத்தில் ஒளி மிக்கதாக விளங்குவதாக அமைந்திட வேண்டுமென்பதில் இந்த மணவிழாவிலே கலந்து கொள்பவர்களுக்கு இரு வேறு கருத்து இருக்க முடியாது.
இந்த திருமணத்தை பொறுத்தவரையில் நான் என்னுடைய இல்லத்திலே உள்ள என்னுடைய செல்வங்களுக்கு வாழ்த்துக்கூறி ஒரு சடங்கினை நிறைவேற்றி வைத்தால் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேனோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சியினை இன்றைக்கு நான் அடைகின்றேன்.
இந்த மகிழ்ச்சி மேலும் மேலும் பெருகுவதாக நம்முடைய அருமை அபுபக்கர் அவர்களுடைய அன்பும், பண்பும் என்னை கவர்ந்தது போல மணமக்களுடைய வாழ்க்கையும் அனைவரையும் கவரதக்க வகையில் அமையட்டும் என்றார்.
மணமக்களை முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர்.