புதையல்-கிருஷ்ணகிரி அருகே 44 தங்க காசுகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே புதையலில் கிடைத்த தங்ககாசுகளை எடுத்து சென்ற மக்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்யும் முயற்சியி்ல் வருவாய் துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 44 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலியாளம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது ரகு(4) என்ற சிறுவன் ஒரு மண் குடுவையை கண்டெடுத்துள்ளான்.
அதை தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளான். போகும் வழியில் மண் குடுவை உடைந்து, அதிலிருந்து தங்க காசுகள் சிதறி ஓடியது. இதையடுத்து தான் அது புதையல் பானை என்பது தெரியவந்தது. இதை பார்த்தவர்கள் தங்களது கைக்கு கிடைத்த தங்க காசுகளை எடுத்து கொண்டு மாயமாகிவிட்டனர்.
ரகு அந்த குடுவை தூக்கி கொண்டு வீட்டுக்கு ஓடினான். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவலை அறிந்த வருவாய் துறையினர், அந்த கிராமத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அவர்கள் ரகுவின் வீட்டில் இருந்த மண் குடுவையை கைப்பற்றினர். மேலும், 37 தங்க காசுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் அருகிலிருந்த அனைத்து வீடுகளிலும் ஒவ்வொன்றாக சோதனை நடத்தினர். மேலும், ஊர் முழவதும் பூமிக்குள் இருப்பது அரசாங்கத்துக்கு சொந்தம். அதை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என தண்டோரா போடப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நஞ்சம்மா, கிருஷ்ணம்மா ஆகியோர் தாங்கள் எடுத்த தலா 2 தங்க காசுகளையும், கிட்டப்பா, ரமேஷ், சின்னண்ணா ஆகியோர் தலா ஒரு காசுகளையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் இதுவரை 44 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த மண் குடுவையி்ல மொத்தம் எத்தனை தங்ககாசு இருந்தது என்பது தெரியாதநிலையில் போலீசார் மேலும் சிலர் தங்ககாசுகளை பதுக்கி வைத்திருக்கலாம் என கருதுகின்றனர். இதனால் அவர்கள் வீடு வீடாக சென்று மீண்டும் சோதனை போட்டு வருகின்றனர்.