ஆப்கான்-தாக்குதலில் 3 இங்கி. ராணுவ வீரர்கள் பலி
லண்டன்: கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்று வேறு தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் மூன்று இங்கிலாந்து ராணுவ வீரர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தாவின் நடவடிககை முற்றிலுமாக அழிக்க அமெரிக்க ராணுவ முயன்று வருகிறது. இவர்களுக்கு இங்கிலாந்து ராணுவமும் உதவி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிரெஸ்க் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இரு வேறு சம்பவங்களில் பலியானார்கள். ஒருவர் குண்டு வெடிப்பிலும், மற்றொருவர் கன்னிவெடி தாக்குதலிலும் சிக்கி உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தெற்கு ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெல்ஸ் படையின் முதல் பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரர் பலியாகியுள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் பலியான இங்கிலாந்து வீரர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 174 பேர் பலி...
இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், ஆப்கானிஸ்தானில் ஹேல்மன்ட் மாகாணத்தில் கிரெஸ்க் பகுதிக்கு அருகே நடந்து குண்டு வெடிப்பில் வெல்ஸ் முதலாவது பட்டாலியன் வீரர் ஒருவர் பலியானார். ஆப்கானிஸ்தானில் பலியான இங்கிலாந்து வீரர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது என்கிறது.
இது இங்கிலாந்து ராணுவத்தின் ஆப்கானிஸ்தான் ஹேல்மன்ட் மாகாண செய்தி தொடர்பாளர் கர்னல் நிக் ரிச்சர்டுசன் கூறுகையில், அந்த வீரர் நாட்டுக்காகவும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் நல்லவர்களுக்காகவும் தனது உயிரை துறந்துள்ளார். அவரது மறைவுக்கு அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.