டிவியில் முகம் தெரிவதற்காக எதையும் பேசக் கூடாது-கட்சியினருக்கு அத்வானி அட்வைஸ்
டெல்லி: டிவியில் நமது முகமும் தெரிய வேண்டும் என்பதற்காக எல்லோரும் எதையாவது பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மிகவும் அமைதியாக, பொறுமையாக, உணர்ச்சிவசப்படாமல் செயல்பட வேண்டும் என்று பாஜகவினருக்கு அத்வானி அறிவுரை கூறியுள்ளார்.
ஜன் சங் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அத்வானி பேசுகையில், நமது பெயர் பத்திரிகைகளில் வர வேண்டும். நமது முகம் டிவியில் தெரிய வேண்டும் என்ற உணர்வு நமது கட்சியினரிடம் நிறைய இருப்பதாக தெரிகிறது. இதுபோன்ற சின்னச் சின்ன நப்பாசைகளுக்கு நாம் அடிமையாகி விடக் கூடாது.
நமது கட்சியில் நிறையப் பேச்சாளர்கள் இருப்பதாக உணர்கிறேன். ஆனால் அதற்காக எல்லோரும், எதையாவது பேசி விட்டு போய் விடக் கூடாது. அமைதியாக பொறுமையாக, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சி விவகாரங்களை டிவி, நாளிதழ்கள் மூலம் வெளிப்படுத்தக் கூடாது.
நமது முன்னோடிகளான முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாய, வாஜ்பாய் ஆகியோர் செய்த தியாகங்களை கட்சியினர் மனதில் கொள்ள வேண்டும். அந்த தியாகங்களுக்கு இழுக்கு நேரிடும் வகையில் நடந்து கொள்ளாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தேர்தல் தோல்வியால் கட்சியினர் மனம் உடைந்து போய் விடக் கூடாது. நமது கட்சிக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications