சென்னை டூ பெங்களூருக்கு புல்லட் ரயில்! வந்தே பாரத், விமானத்தை விட வேகம்? எல்.முருகன் அதிரடி
சென்னை: மும்பை- அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கும் வரும் நிலையில் சென்னை- பெங்களூர், சென்னை டூ ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதனால் தென் இந்தியாவின் மிக முக்கிய இரு பொருளாதார மையங்களான சென்னையும், பெங்களூருவும் இனி இன்னும் நெருக்கமாகப் போகின்றன. இந்திய ரயில்வே துறையின் அடுத்த பிரம்மாண்ட பாய்ச்சலாக, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அதிரடி அறிவிப்பை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவின் அசுர வேக வளர்ச்சி குறித்தும், அதற்குத் தோள் கொடுக்கும் நவீன உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்தும் பல்வேறு முக்கியத் தரவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
விழா மேடையில் இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அமைச்சர் எல்.முருகன் பின்வரும் முக்கியப் புள்ளிகளை முன்வைத்தார்:"இன்று இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு நாட்டின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களே முக்கியக் காரணம்.
உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் , ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்திய இளைஞர்கள் உலகையே வியக்க வைக்கும் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலைகள், உலகத்தரம் வாய்ந்த நவீன விமான நிலையங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன 'வந்தே பாரத்' (Vande Bharat) ரயில்கள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அசுர வேகத்தில் எடுத்துச் சென்றுள்ளன.
சென்னை டூ பெங்களூரு: தென்னக ரயில்வே வரலாற்றில் இந்த அதிவேக ரயில் திட்டம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் இந்த வழித்தடத்தின் பயண நேரத்தை ஓரளவு குறைத்துள்ள போதிலும், வரவிருக்கும் புதிய அதிவேக ரயில் திட்டம் ஒட்டுமொத்த பயண அனுபவத்தையே மாற்றியமைக்கக் கூடியது.
இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, மணிக்கு 320 முதல் 350 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மூலம் சென்னையில் இருந்து மிகக் குறைந்த நிமிடங்களிலேயே பெங்களூருவைச் சென்றடைந்து விட முடியும். அதாவது விமானத்தை விட அதி வேகத்தில் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை மணி நேரத்தில் பெங்களூரை அடையும் என்பதை தெரியவில்லை.
இந்தியாவில் பாதுகாப்பான, அதிவேக மற்றும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் பயணிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேக் இன் இந்தியா : இந்த அதிநவீன ரயில்கள் அனைத்தும் முழுமையாக இந்தியாவிலேயே, நமது நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டவை என்பது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.
எக்ஸ்பிரஸ் சாலைகள் மற்றும் விமான நிலையங்களின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தென்னகத்தின் மிக முக்கியத் தேவையாக இருக்கும் சென்னை-பெங்களூரு அதிவேக ரயில் திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகனின் இந்த அறிவிப்பு சென்னை மற்றும் பெங்களூரு இடையே தினசரி பயணம் மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப (IT) ஊழியர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெறும் வந்தே பாரத் ரயில்களோடு நின்றுவிடாமல், உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிவேக ரயில் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு காட்டி வரும் தீவிரம், "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை நோக்கி நாடு மிகச் சரியான பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை சென்னை டூ கோவை, சென்னை டூ மைசூர், சென்னை எழும்பூர் டூ நெல்லை, சென்னை டூ விஜயவாடா, கோவை டூ பெங்களூர், சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை டூ பெங்களூர், எர்ணாகுளம்- பெங்களூர் ஆகியவையாகும்.
இந்த ரயில்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன் பயண நேரத்தையும் வெகுவாக குறைக்கிறது. அதனால் இந்த ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் இதில் புக் செய்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications