நாளை முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
சென்னை: பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தரக்கோரி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இது குறி்த்து இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் விவரம்:
சுதர்சனம் (காங்கிரஸ்): பால் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் அரசுக்கு பால் கொடுக்க மாட்டோம் என்று போராட்டமும் அறிவித்துள்ளனர். எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்வர் கருணாநிதி: சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பால் விலை உயர்வு பற்றி அவையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி பேசலாம். (கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் பால் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)
சுதர்சனம்: கடந்த முறை இது போன்ற பிரச்சினை வந்த போது அரசு பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி 50 காசு உயர்த்தி மானியமும் வழங்கியது. அது போன்று இந்த முறையும் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
கருணாநிதி: அதுபற்றி பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
எஸ்.வி.சேகர் (அதிருப்தி அதிமுக): சென்னை நகரில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க கூடுதலாக பால் சப்ளை செய்யப்படுமா?
அமைச்சர் மதிவாணன்: ஆவின் நிறுவனம் சார்பில் 22 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 10.9 லட்சம் லிட்டர் சென்னை நகரில் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன. ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது.
இதை சமாளிக்க ஒன்றிய அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு ஆவின் பால் சென்னையில் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications